வாக்குக்கு பணம் வேண்டாம் என குடியிருப்பு நல சங்கம் வைத்த பேனர் கிழிப்பு
காஞ்சிபுரம் அடுத்த கோனேரிகுப்பம் கிராம ஊராட்சியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வைக்கப்பட்ட பேனரை சமூக விரோதிகள் கிழித்தெறிந்தனர்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகரின் விரிவாக்க குடியிருப்பு பகுதியாக மக்களால் அதிகம் விரும்பும் பகுதி வையாவூர் சாலை பகுதி. இப்பகுதி கோனேரிகுப்பம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாகும்.
இங்கு அண்ணாநகர், தேவி நகர், அண்ணா நகர் விரிவு 2 உள்ளிட்ட 15 குடியிருப்பு நகரில் உள்ளது. 350க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பலருக்கு சுற்றியுள்ள கிராமங்களில் வாக்குகள் உள்ளதால் இப்பகுதியில் 300 வாக்குகள் உள்ளது.
கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின் போது இப்பகுதியில் வசிக்கும் ஒருங்கிணைந்த அண்ணாநகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் தேர்தலின்போது இங்குள்ள வாக்களர்களுக்கு பணம் தர வேண்டாம் என பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
தற்போது நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடந்த காலத்தைப் போல் எங்கள் பகுதியில் வசிக்கும் எந்த ஒரு வாக்காளர்களுக்கு பணம் அளிக்க வேண்டாம் எனவும் வெற்றி பெற்ற பின் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தாருங்கள் என கூறி காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில் ஒருங்கிணைந்த அண்ணா நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் நேற்று மாலை பேனர் அமைக்கப்பட்டது.
இந்த பேனர் நள்ளிரவில் சமூக விரோதிகளால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்ட அப்பகுதி குடியிருப்புவசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாக்குக்கு பணம் வேண்டாம் என அறிவித்த பதாகைகளை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்தறையில் புகார் அளிக்க உள்ளதாக குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.