பெரியார் வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி 12ல் ஆர்ப்பாட்டம்
பெரியார் வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 12ம் தேதி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
HIGHLIGHTS
பெரியார் வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 12ம் தேதி அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்துக் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து அரசின் அறிவிப்பு நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பர்கூர் மலைப்பகுதி மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட திடீர் ஆலோசனைக் கூட்டம் தாமரைக்கரை அருகே நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடி இன மக்கள் சங்க மாநில தலைவர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், 'பர்கூர் மலைப்பகுதியை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் பர்கூர் மலைவாழ் மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2022-ம் ஆண்டில் இருந்தே வன அங்கீகார சட்டம் 2006-ஐ முறையாக அமல்படுத்தி அதன் பலன்கள் மக்களிடம் சென்று சேர்ந்த பிறகு அறிவிக்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மக்களுக்கு சட்ட உரிமை களை கொண்டு சேர்க்காமல் தற்போது அறிவிப்பு வந்துவிட்டது. மேலும் வனவிலங்கு சரணாலயத்தில், புலிகள் காப்பகத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை விதித்து ஏற் கனவே சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டுள்ளது.
இனிமேல் கால்நடைகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே பர்கூர் மலைப்பகுதியை சரணாலயமாக அறிவித்ததை அரசு திரும்ப பெற வேண்டும். மேலும், இதை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வனத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சர், திருப்பூர் எம்பி சுப்பராயன், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்படும்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் வருகிற 12ம் தேதி அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும்' முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.