அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் 240 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5 பள்ளி வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டன.
HIGHLIGHTS
கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலைமையில் 240 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 5 பள்ளி வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டன.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பவானி தாலுகாக்களுக்கு உட்பட்ட 36 தனியார் பள்ளிகளை சேர்ந்த 320 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கோபி வட்டாரப் போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி தலைமையில் அந்தியூர் அருகே பருவாச்சியில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடந்தது. இந்த ஆய்விற்கு, தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 320 வாகனங்களில் 240 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் மாணவ- மாணவிகள் ஏறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள், அவசர வழி, கண்காணிப்பு கேமராக்கள், வேக கட்டுப்பாட்டு கருவி போன்றவை முறையாக உள்ளனவா? மற்றும் செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சில குறைகள் இருந்த 5 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த குறைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினர்.
பவானி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் குணசேகரன், பவானி வட்டாட்சியர் தியாகராஜன், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, போக்குவரத்து துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீத்தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.