மேட்டுப்பட்டியில் மும்மதத்தினர் போற்றும் 'பாஸ்கு தேர்த்திருவிழா'
மும்மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் திண்டுக்கல், மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழா தேரோட்டம் நடந்தது.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் பழமை வாய்ந்த மேட்டுப்பட்டி பாஸ்கு விழாவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பாஸ்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான உயிர்த்த ஆண்டவரின் தேர் பவனி நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தேரை அர்ச்சரிப்பு செய்து தொடக்கி வைத்தார். இந்த தேர்பவனி வியாகுல அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கி மதுரை ரோடு வழியாக பேகம்பூர் மசூதியை வந்தடைந்தது. ஜமாத்தார்கள் மற்றும் முஸ்லிம் நண்பர்கள் பங்குத்தந்தை மற்றும் முக்கியஸ்தர்களை மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனர்.
அதேபோல் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே பரம்பரை அறங்காவலர்கள், அவர்களுக்கு மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர். திண்டுக்கல்லில் மும்மதத்தினரும் சேர்ந்து வழிபட்டு வருவது மதநல்லிணக்கம் சிறப்பாக பேணப்படுவது உறுதியாகிறது. பாரம்பரியமாக இந்த வழக்கம் நடைபெற்று வருகிறது.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை தேர் அடைந்தது. தேர் பவனியின் போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உயிர்த்த இயேசுவின் மடியில் கிடத்தி ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.