அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி தலைமைதாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் விஜயன் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு மாநிலச் செயலாளர் குப்புசாமி ,தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் பெருமாள் ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர்.
இதில் 1. 1. 2020 முதல் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலைப்படி 11 சதவீதம் உடனடியாக தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனோவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் செலவுத் தொகையை முழுமையாக திரும்ப வழங்க வேண்டும்.
மாவட்ட அளவிலான கமிட்டி உத்தரவிட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்காமல் திருப்பி அனுப்புகின்ற போக்கை கண்டிப்பதுடன், முழு செலவு தொகையும் வழங்க உத்தரவிடவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.