தர்மபுரி கிறிஸ்தவ பேராலயத்தில் 9 உண்டியல்கள் உடைப்பு: பணம், பொருட்கள் கொள்ளை
தர்மபுரி கிறிஸ்தவ பேராலயத்தில் 9 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் பணம், பொருட்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
தர்மபுரி பெரியார் சிலை அருகே தூய இருதய ஆண்டவர் பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் நாள்தோறும் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அது போல் நேற்று பிரார்த்தனை கூட்டம் முடிந்த பிறகு பேராலயத்தில் பணிபுரியும் உபதேசியார் தனிஸ்லால் பேராலாயத்தை மூடிவிட்டு சென்றார்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவதற்கு பேராலயத்தை திறக்க வந்தபோது ஏற்கனவே மர்ம நபர்கள் திறந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அங்குள்ள 9 உண்டியல்கள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள், ஒயின் பாட்டில்கள் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உபதேசியார் தனிஸ்லால் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி(பயிற்சி) கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மையப்பகுதியில் உள்ள பேராலயத்தில் திருட்டு போனது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உபதேசியார் கூறும் போது, வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு அதில் உள்ள பணம் மூலம் மின் கட்டணம், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சுமார் ரூபாய் 50 ஆயிரம் உண்டியல் பணம் இருக்கலாம் என தெரிவித்தார்.