வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற விலங்குகளுக்கும் பரவியதா என சோதனை செய்யப்படுகிறது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள், ஊர்வன என்று பல உயிரினங்கள் பராமரிக்கப்ப்டடு வருகின்றன. கடந்த மே 26ம் தேதி முதல் கொரோனா 2ஆம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மீனா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், பூங்காவில் மேலும் 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் சிங்கம் மட்டுமல்லாமல் குரங்கு உள்ளிட்ட மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.