சாலைகளில் விவசாய பொருட்களை உலர வைத்தால் கடும் நடவடிக்கை
சாலைகளில் விவசாயபொருட்களை உலர வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
HIGHLIGHTS
இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா விடுத்துள்ள செய்திகுறிப்பு: இன்று, 23.12.2021 தா.பழூர் அருகே விவசாய விளைபொருட்களை சாலையில் உலர வைத்ததால், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் அபாயகரமாக விளைபொருட்களை சாலையில் கொட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த குற்றத்திற்காக, கோடங்குடியைச் சேர்ந்த ரவி (40) என்பவரை, தா.பழூர் காவல்துறையினர்கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பிரதான சாலைகள் மற்றும் கிராமங்களில் உள்ள சாலைகளில் மக்கள் விவசாய விளைபொருட்களை சாலையில் காய வைப்பதால் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் குவித்து வைப்பதாலும் அலட்சிய செயல்களாலும் தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. விளைபொருட்களை சாலையில் காய வைப்பது குற்றமாகும். இவ்வாறு சாலைகளில் விளை பொருட்களை காய வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.