திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி ரயில் சேவை - மக்களவை உறுப்பினர் கோரிக்கை
திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி ரயில் சேவை மத்திய அரசுக்கு எம்பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி ரயில் சேவை தொடங்க மத்திய அரசுக்கு திருவண்ணாமலை எம்பி., அண்ணாதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாட்டவர், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். ஆனால் திருவண்ணாமலை நகருக்கு வருவதற்கு தேவையான அளவு ரயில் போக்குவரத்து வசதி இல்லை.
குறிப்பாக திருவண்ணாமலை - சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லை. விழுப்புரம் அல்லது காட்பாடி வரை சென்றால் தான் சென்னைக்கு சென்றடைய முடியும். இதனால் நேரமும் செலவும் அதிகரிப்பதால், திருவண்ணாமலை -சென்னை இடையே ரயில் சேவை அவசியம்.
அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து தெற்கு பகுதிக்கும் அதாவது மதுரை, தூத்துக்குடி பகுதிகளுக்கும் நேரடி ரயில்வே சேவையை துவங்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதுபற்றிய கேள்வியினை நேற்று மக்களவையில் எழுப்பி உள்ளேன் எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.