அண்ணாமலையார் கோவிலில் சூரசம்ஹாரம்
Soorasamharam -திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
Soorasamharam -திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று மாலை வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகனார் ரிஷப வாகனத்தில் எழுந்தருள, சூரசம்ஹாரம் நடைபெற்றது.
திருவண்ணாமலை சின்னகடை தெரு வட வீதி சுப்பிரமணியர் கோவில் முன்பு நடைபெற்ற கந்த சஷ்டி நிறைவு விழாவாக, சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சஷ்டி விரதம் நிறைவையொட்டி, இக்கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. வழக்கமாக சஷ்டி விரதத்தன்று கம்பத்து இளையனார் சன்னதியை, பக்தர்கள் 108 முறை வலம் வருவார்கள். அதன்படி இன்று ஏராளமான பக்தர்கள் கம்பத்து இளையனார் சன்னதியை சுற்றி 108 முறை வலம் வந்தனர். மேலும் அங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள, வடவீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விரதம் இருந்த பக்தர்கள், கோவிலில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழ்பெண்ணாத்தூர் வட்டம் சோமாசி பாடி குன்றின் மீது அமைந்துள்ள, முருகர் கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆரணி கொசபாளையம் பகுதியில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது ஆண்டு கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி கடந்த 24-ம் தேதி முதல் தினமும் காலை, மாலை, இரவு என 3 வேளையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. கந்த சஷ்டி விழா நிறைவு நாளான நேற்று, லட்சார்ச்சனை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் வெளிவளாகத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிலை 108 முறை வலம் வந்தனர். இதேபோல சின்ன கடை தெருவில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், சேவூர் சுபான்ராவ் பேட்டை புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
போளூர் நற்குன்று பாலமுருகன் மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. விழாயொட்டி இன்று டாக்டர் சிவநேசன் தலைமையில் 200 பெண்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, நற்குன்று பாலமுருகன் கோவிலை அடைந்தனர். அங்கு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2