திருவண்ணாமலை மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகளும் இயக்கப்படுகிறது
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஸ்டிரைக் அறிவித்தன .
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களின் வரவு செலவுக்குமான வித்தியாசத்தை அரசு பட்ஜெட்டில் வழங்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 8ம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இருந்த போதிலும் திமுகவின் தொமுச தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, தீரன் தொழற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த தொழிற்சங்க பணியாளர்களைக் கொண்டு, பஸ்களை போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது,
இந்நிலையில் திருவண்ணாமலை பணிமனையிலிருந்து இன்று காலை 5 மணி முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையிலிருந்து சென்னை, செங்கம், காஞ்சிபுரம், திண்டிவனம், புதுச்சேரி, கோயம்புத்தூர், பெங்களூரு, திருப்பதி, சித்தூர் ,வேலூர் ,கடலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கி வருகிறது.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து பணிமனையின் 59 பேருந்துகளில் 58 பேருந்துகளும் இயக்கப்பட்டன. காலை 6 மணியளவில் அண்ணா தொழிற்சங்கம், சி. ஐ. டி. யு, ஏ. ஐ. டி. யு. சி, பாட்டாளி, சி. பி. எம், பி. எம். எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து பணிமனை முன்பாக 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறித்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி பணிமனையிலிருந்து வெளியே வரும் பேருந்தை வழிமறித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் ௧௦௦ சதவீத அனைத்து பேருந்துகளும் பேருந்துகள் வழக்கம்போல பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றன. தொ. மு. ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அனுபவமிக்க தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு செய்யாறிலிருந்து அனைத்து வழித்தடங்களிலும் அதற்கான நேரத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டதால் செய்யாறிலிருந்து வெளியூர் செல்லும் வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் உரிய நேரத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தம் செய்து தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் அகவளப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, பாட்டாளி தொழிற்சங்கம், மனித உரிமைகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.