தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கிறது: அமைச்சர் வேலு குற்றச்சாட்டு
மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை என்னவென்றால் தமிழகத்தை வஞ்சிப்பது தான் என்று அமைச்சர் வேலு கூறினார்
HIGHLIGHTS
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை தென்மாத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் எ.வ. வேலு மரக்கன்றுகளை நட்டு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி விழா உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசபாக்கம்), மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதிஷ், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு கூறுகையில்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். மேலும் அண்ணாமலையார் கோயிலை சுற்றிலும் மாட வீதியில் கார்த்திகை தீப திருவிழா காலங்களில் தினம்தோறும் சாமி வீதி உலா மற்றும் தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் தேர் திருவிழாக்கள் நடைபெறும்.
இந்த தேரோடும் வீதியை திருப்பதி போல் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தற்பொழுது மீண்டும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருவூடல் தெரு திரௌபதி அம்மன் கோவில் முதல் பேகோபுர மேடு வட ஒத்தவாடை தெரு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
நரேந்திர மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை என்னவென்றால் தமிழகத்தை வஞ்சிப்பது தான், குறிப்பாக திண்டிவனம் திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம், திருவண்ணாமலை ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம், திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டம் ஆகிய மூன்று திட்டங்களுக்கும் பணம் ஒதுக்கீடு செய்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இதுவரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.
கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தொல்லியல் துறையிடம் இருந்து அண்ணாமலையார் திருக்கோவில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக பாஜக அரசு ஆன்மீகம் மற்றும் இந்து என்ற பெயரில் கட்சியை வளர்க்க முயற்சிகள் நடைபெற்றதே தவிர, அதனால் எந்த நகருக்கும் மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் எந்த வளர்ச்சியும் இல்லை. திராவிட இயக்கங்கள் ஆளும் பொழுது திமுக ஆட்சி செய்யும் பொழுது தான் தமிழ்நாடும், திருவண்ணாமலையும் வளர்ச்சி பெற்று உள்ளது.
தமிழக ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் எந்த விதமான தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆளுநர் தமிழ்நாட்டை தானும் ஆள வேண்டும் என்று முயற்சி செய்கிறார். மாணவர்கள் பட்டமளிப்பு விழா பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டத்தினை இணை வேந்தர் துணைவேந்தர்கள் வழங்கலாம் என்று சட்டம் இருந்த நிலையில், தான் பட்டம் வழங்க வேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காமல் காத்திருக்க வைப்பது அவரின் குணத்திற்கு இதுவே சான்றாகும்.
உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு அறங்காவலர் குழு தேர்வு செய்வதற்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான நபர்களை தேர்வு செய்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவிப்பார். என்று கூறினார்