வேங்கிக்கால் ஊராட்சியில் நூலக கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு
வேங்கிக்கால் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் நூலக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை கூடுதல் கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி செல்வநகர் பகுதியில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.
எனவே வேங்கிக்காலில் நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் அருகில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊரக வளர்ச்சி துறை மூலம் புதிய நூலகம் கட்டிடம் கட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த நூலகம் அமைப்பதற்கு ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் புதிய நூலக கட்டிடம் கட்ட இடத்தினை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வேங்கிக்கால் பகுதியில் 2 பொது கழிப்பிட கட்டிடங்களை கட்டவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் பூங்கொடி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.