கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
HIGHLIGHTS
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை திருவிழாவையொட்டி எல்லை தெய்வ வழிபாட்டின் 3ம் நாளான நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது. விநாயகர் சண்டிகேசுவரர் உற்சவம்; வாஸ்து பூஜை நடந்தது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்களுடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து 10 நாட்களுக்கு இரவும் பகலும் இவ்விழா நடைபெறும். வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
தீப திரு விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி மாடவீதி உலா நடைபெற உள்ளது. ஆண்டு தோறும் சாமி வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் சேவா சங்கத்தினர் சார்பில் நேற்று கோவிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான 10 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, ஆட்சியர் முருகேஷ், காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.