திருவண்ணாமலையில் தீப்பிடித்து எரிந்த குப்பை கிடங்கு
குப்பை கிடங்கில் தீ, வெளியேறிய புகையினால் பொதுமக்கள் அவதி
HIGHLIGHTS
திருவண்ணாமலைநகராட்சி குப்பை கிடங்கில் திடீரெனத்தி பரவியதால் அப்பகுதியில் தீ மளமளவென்று பரவி கடும் புகை கிளம்பியது அதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. நகரம் முழுவதும் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள் இங்கு தான் வந்து கொட்டுவார்கள் தன் கணக்கில் கொட்டப்படும் இந்த குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.
தற்போது குப்பை கிடங்கில் குப்பை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று மதியம் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து உள்ளனர். காற்றின் வேகத்தால் தீ குப்பை கிடங்கில் பெரும்பாலான இடத்தில் பரவி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் குப்பை கிடங்கிற்கு வந்து தீ எரிந்த பகுதிகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ எரியும் வேகத்தை கட்டுப்படுத்தினர். இருப்பினும் ஆங்காங்கே லேசாக தீ எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து அதிகாலை வரை குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதனால் அங்கிருந்து வெளியேறிய கரும் புகையினால் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலை, போளூர் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அவ்வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் சிலருக்கு புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டது.
அப்பகுதியில் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறியதாவது
தீயணைப்பு வண்டிகள் மூன்றும், நகராட்சிக்கு சொந்தமான ஐந்து தண்ணீர் லாரிகளில் தண்ணீரும், மேலும் தனியார் லாரிகளில் தண்ணீரும் கொண்டுவரப்பட்டு நெருப்பை முழுவதுமாக அணிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பை பிரித்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குப்பைகளை பிரித்தெடுத்து உரமாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அந்தப் பணிகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடைந்து விட்டால் இந்த பகுதி சுத்தமாகிவிடும். மேலும் இந்தப் பகுதி சுற்றி சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன .
அவலூர்பேட்டை சாலை அருகே உள்ள சுற்றுச்சூழல் சற்று இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் இருந்து அந்த வழியே சிலர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதையும் இப்போது சரி செய்து விடுகிறோம். மேலும் அடுத்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும் என தெரிவித்தார்.
தீ பற்றிய தகவல் அறிந்ததும் உடனடியாக நகராட்சி ஆணையாளர் தலைமையில் ,நகராட்சி ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் ,அதிகாரிகள் முழுமையாக அங்கிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதை பொதுமக்கள், அவ்வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த குப்பை கிடங்கு குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ளதாலும், கிரிவலப்பாதையில் அமைந்து உள்ளதாலும் இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள்,பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.