தீபத்திருவிழா: தற்காலிக பேருந்து நிலையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தேர்கள் சீரமைக்கும் பணி, தற்காலிக பேருந்து நிலையம் ஆகியவற்றை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் 7-ம் நாள் விழாவில் 3-ந்தேதி பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெற உள்ளது.
பஞ்சமூர்த்திகளின் தேர்களும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தேரடி வீதியில் நிறுத்தப்பட்டுள்ள 5 தேர்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
2,700 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி டிசம்பர் 5,6,7 ம் தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தமிழக போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் நான்கு கூடுதல் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் திருவண்ணாமலை பேருந்து நிலையம் ஆகியவைகளை போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, சேலம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ஈரோடு, கோவை, கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு மொத்தம் 6500 நடைகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல்களை 9445456040 , 9445456043 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ், டிஆர்ஓ பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையர் முருகேசன் , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதமன் ,திருக்கோயில் இணை ஆணையர் அசோக் குமார் , காவல்துறை கண்காணிப்பாளர் குணசேகரன், வட்டாட்சியர் சுரேஷ், போக்குவரத்து துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்