திருவண்ணாமலை ரயில்வே மேம்பாலம்: முதல்வர் நாளை திறந்து வைக்கிறார்
திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலத்தை நாளை காலை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்கிறார்,பொதுமக்கள் மகிழ்ச்சி
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாசாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி துவங்கியது. தற்போது மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதமாகியும் பாலம் திறக்கப்படாமல் இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அண்ணாசாலையில் மேம்பால பணிகள் நடப்பதால் திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் திருவண்ணாமலைக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவலூர்பேட்டை சாலை வழியாகவும் வேட்டவலம் பைபாஸ் சாலை வழியாகவும் சென்று வந்தன . இதனால் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
முதல்வர் நேரில் வந்து மேம்பாலத்தை திறந்து வைப்பார் எனவும் அதனால் பணிகள் முடிந்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாகவும் பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், ஆன்மீக பக்தர்கள் பாஜக அதிமுக என அனைவரும் மேம்பாலத்தை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும் அடுத்த வாரம் சித்ரா பவுர்ணமி வரை இருப்பதால் கிரிவலத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக உடனடியாக மேம்பாலத்தை திறக்க வேண்டும் என ஆன்மீக பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தமிழக அரசிடமிருந்து நாளை காலை 9.30 மணி அளவில் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைப்பார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன் திருவண்ணாமலை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர். மேம்பாலம் தற்போது மின் விளக்குகளால் ஜொலிக்க பட்டு அலங்கரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.