மாநில இளையோர் தடகளப்போட்டி சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி
Athletic Competition -திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில இளையோர் தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணியினர் வென்றனர்.
HIGHLIGHTS
Athletic Competition -திருவண்ணாமலையில் நடைபெற்ற 36-வது மாநில இளையோர் தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை மாவட்ட தடகள சங்கத்தினர் கைப்பற்றினர். அவர்களுக்கு கோப்பையை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி, மாவட்ட தடகள சங்கம் இணைந்து 36 வது மாநில இளையோர் தடகளப் போட்டிகள் 16ஆம் தேதி முதல் நேற்று 20ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் கலந்து கொண்டு இந்த தடகள போட்டியை கடந்த 16ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் 14, 16, 18, 20 என்ற வயதின் அடிப்படையில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், பல்வேறு ஓட்டப் பந்தயங்கள், தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று முறையில் பதக்கங்களும், சான்றிதழ்களும் அவ்வபோது வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தினமும் நடைபெற்ற தடகள போட்டிகள் நேற்று மாலை நிறைவு பெற்றது.
போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை மற்றும் சிறந்த தடகள வீரர்களுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில தடகளசங்கத் துணைத் தலைவரும், மாவட்ட தலைவருமான எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் திருமால்பாபு, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் அதிக புள்ளிகள் பெற்று சென்னை மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்த அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
மேலும் அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையையும் வென்றனர். 2-ம் இடத்தை கோவை மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்த அணியினர் கோப்பையை வென்றனர்.
இவர்களும் 2-ம் இடத்திற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான கோப்பையையும் வென்றனர். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சாம்பியன் கோப்பையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த தடகள சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2