திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா துவக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஆகும்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயன புண்ணிய கால கொடியேற்றும் விழா இன்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது.
இன்று தொடங்கி பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 10ம் நாள் அன்று ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும்.
இன்று அதிகாலை திருக்கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில், காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் வேதமந்திரங்கள் சிவாச்சாரியார்கள் முழங்க கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக திருவிழா தொடங்கியது
அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்
அதைத்தொடந்து, விநாயகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் பவனி வந்து அருள்பாலித்தனர்
ஆனி பிரசோற்சவ விழாவை முன்னிட்டு, தொடர்ந்து 10 நாட்களுக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி, சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்
விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர் டிவிஎஸ் ராஜாராம், திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர்கள் , கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.