ஐஸ்கட்டி மீது அமர்ந்து 11 வயது சிறுமி மஞ்சப்பை விழிப்புணர்வு
பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பையை உபயோகிக்க வலியுறுத்தி ஐஸ்கட்டி மீது அமர்ந்து யோகா செய்து 11 வயது சிறுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருவருட்பா ஆசிரமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பையை உபயோகிக்க வலியுறுத்தி 11 வயது சிறுமி ஐஸ் கட்டியின் மீது நின்று யோகாசனங்கள் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் திருவண்ணாமலை அருகில் பண்டிதப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்- நிர்மலா தம்பதியரின் 11 வயது மகள் வர்ஷா என்பவர் ஐஸ் கட்டிகள் மீது அமர்ந்தும், நின்றவாறும் 51 விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தார்.
அப்போது ஏகபாத சிரசாசனம், பத்மாசனம், யோக நித்திரை ஆசனம், விருச்சிகாசனம், சிரசானம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை 3 நிமிடங்கள் 51 வினாடிகளில் நிகழ்த்தி சாதனை செய்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நீதிபதி கிருபாநிதி, நடிகர் தாடி பாலாஜி, மாவட்ட கல்வி துணை ஆய்வாளர் குமார் ஆகியோர் பங்கேற்று சிறுமியை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். முடிவில் யோகா பயிற்சியாளர் கல்பனா நன்றி கூறினார்.