அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை. ஆட்சித்தலைவர் விஷ்ணு எச்சரிக்கை.
HIGHLIGHTS
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்ககூடாது மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு எச்சரிக்கை.
அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார். அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் விலைப்பட்டியல் விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். உர விற்பனை நிலையங்களில் விற்பனை முனையக்கருவி மூலம் உரங்கள் முறையாக விநியோகம் செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உர விலை மற்றும் உர இருப்பு விபரத்தினை விவசாயிகளின் பார்வையில் படுமாறு அனைத்து உரக்கடைகளிலும் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரவிலை இருப்பு விபர பலகையில், புகார் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண்களை குறிப்பிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் உர உரிமமும் ரத்து செய்யப்படும். 45 கிலோ அளவுள்ள யூரியா மூடையின் விலை ரூ.266.50/-ஆகும். 50 கிலோ அளவுள்ள டிஏபி மூடையின் விலை ரூ.1200/- ஆகும். IPL, MCF மற்றும் Mosaic நிறுவனங்களின் பொட்டாஷ் மூடையின் விலை ரூ.1040/- CIL நிறுவன பொட்டாஷ் மூடையின் விலை ரூ.1015/- ஆகும். 50 கிலோ அளவுள்ள 20:20:0:13 காம்பளக்ஸ் உரங்களை IPL, நிறுவனம் ரூ.1050/- க்கும், IFFCO நிறுவனம் ரூ.1220/-க்கும், Spic நிறுவனம் ரூ.1275/-க்கும், Fact நிறுவனம் ரூ.1390/-க்கும், CIL நிறுவனம் ரூ.1225/-க்கும், Kribhco நிறுவனம் ரூ.1175/-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
50 கிலோ அளவுள்ள 10:26:26 காம்பளக்ஸ் உரங்களின் விலையானது IFFCO நிறுவனம் ரூ.1440/-க்கும், Kribhco நிறுவனம் ரூ.1375/-க்கும், CIL நிறுவனம் ரூ.1300/-க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 கிலோ அளவுள்ள 17:17:17 காம்பளக்ஸ் உரங்களின் விலையானது Spic நிறுவனம் ரூ.1300/-க்கும் MFL நிறுவனம் ரூ.1250/-க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 கிலோ அளவுள்ள 16:20:0:13 காம்பளக்ஸ் உரங்களின் விலையானது IPL நிறுவனம் ரூ.1250/-க்கும், CIL நிறுவனம் ரூ.1125/-க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மோனியம் சல்பேட் உரம் ரூ.850/-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில உரங்களின் விலை, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபட்டு இருப்பதால் விவசாய பெருமக்கள் தனியார் உரவிற்பனை நிலையங்களில் சென்று உரங்கள் வாங்கும் பொழுது மூடையில் அச்சடிக்கப்பட்ட கூடுதல் பட்ச விலையினை பார்த்து அதற்கு மிகாமல் வாங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகள் உரவிற்பனை நிலையத்திற்கு செல்லும் போது அவர்களது ஆதார் அட்டையினை கொண்டு சென்று உரம் வாங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் உரம் வாங்கும் போது கட்டாயமாக உரம் வாங்கியதற்கான இரசீது கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ளும் போது மண்வள அட்டை பரிந்துரையின்படி உரமிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.