/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை பொட்டலமிட தடை.. மீறினால் அபராதம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் சூடான உணவுப் பொருட்கள் பொட்டலமிடுவது தடை செய்யப்படுகிறது என்றும் மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலித்தீன் பைகளில் உணவுப் பொருட்களை பொட்டலமிட தடை.. மீறினால் அபராதம்…
X

விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

தூத்துக்குடியில், பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கும், பாழாப்போன பார்சலும் என்ற குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் சூடான உணவுப் பொருட்களை பொட்டலமிடும் பொழுது, அந்தப் பைகளில் இருந்து, டைஈதைல்ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்ஃபினால்-ஏ போன்ற வேதிப்பொருட்கள் வெளியாகி, அவை உணவுடன் கலந்துவிடும்.

அவ்வாறு, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் இருந்து வெளிப்படும் டைஈதைல்ஹெக்சைல் தாலேட் மற்றும் பிஸ்ஃபினால்-ஏ போன்ற வேதிப்பொருட்கள் கலந்த உணவினைத் தொடர்ந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஹார்மோன் பிரச்சினைகள், சிறுநீரகக் கற்கள், ஈரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பதிற்கு பல அறிவியல் ஆய்வுகள் ஆதாரமாக உள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பொட்டலமிடுதல்) ஒழுங்குமுறைகள், 2018-இன் பட்டியலில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடப் பயன்படுத்த வேண்டிய உணவுத் தர பிளாஸ்டிக் பொருட்களின் வகைகள் குறித்தும், அதே ஒழுங்குமுறைகளின் பட்டியலில் உணவுப் பொருட்களின் வகைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய பொட்டலமிடும் பொருட்களின் வகைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தால் அறிவிக்கை செய்யப்பட்டு உள்ளன.

அதன் அடிப்படையில், அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் மற்றும் பாலீத்தீன் பைகளில் சூடான உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக் கூடாது. அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை.

எனவே, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிடக்கூடாது என்பதை மேலும் வலியுறுத்தும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, "ப்ளாஸ்டிக்கும் பாழாப்போன பார்சலும்" என்ற விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதே வேளையில், சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதால், பிளாஸ்டிக்கில் இருந்து வெளிப்படும் வேதிப்பொருட்களால் நுகர்வோர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பொது சுகாதாரக் குறைபாடுகளைத் தடுக்க, சூடான உணவுப் பொருட்களை, அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக்கில் பொட்டலமிடுவதைத் தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சூடான உணவுப் பொருட்களை அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளில் பொட்டலமிடுவது தடை செய்யப்படுகின்றது. இதற்கான உரிய ஆணை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலரால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருவதால், உணவு வணிகர்கள் யாரும் டீ, காபி, பால், சாம்பார், ரசம் மற்றும் இதர சூடான குழம்பு வகைகளையும் கூட்டு, பொரியல் போன்ற சூடான உணவுப் பொருட்களையும் அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது.

தவறும்பட்சத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற்றவராகவோ அல்லது அதற்குத் தகுதி வாய்ந்தராகவோ இருந்தால், "சமரசத் தீர்வு" மூலம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பிரயோகித்து, தல் முறையாக குற்றம் செய்தவராக இருப்பின், 2000 ரூபாய்க்கு மிகாமலும், இரண்டாம் முறை குற்றமிழைத்தால், 5000 ரூபாய்க்கு மிகாமலும் அபராதம் விதிக்கப்படும்.

ஒரே வணிகர் திரும்பவும் மூன்றாம் முறையாகக் குற்றமிழைத்தால், 10000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, கடையின் இயக்கத்தினை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயத்தில், குற்றமிழைத்தவர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவராக இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் மேற்கூறிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு வணிகர்கள் தங்களது கடைகளின் முகப்பில், "இங்கு அனுமதிக்கப்படாத உணவுத் தரம் இல்லாத பிளாஸ்டிக் பைகள் அல்லது கொள்கலன்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படமாட்டாது" என்ற அறிவிப்பு பலகையை நிறுவ வேண்டும்.

நுகர்வோர்கள் உணவுப் பொருட்களைப் பார்சல் வாங்க, தூக்கு வாளி, பிளாஸ்க், டிபன் பாக்ஸ், டிபன் கேரியர் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு சென்று மாவட்ட நிர்வாகத்தின் இந்த நல்ல முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Updated On: 5 Dec 2022 5:40 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு