வ.உ.சி துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா உறுதி.!
பாதுகாப்புக்காக 25-ந்தேதி வரை, துறைமுக நிர்வாக அலுவலகம் மூடப்படுவதாக அறிவிப்பு.
HIGHLIGHTS
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியே தினசரி பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கும், சிங்கப்பூர் மலேசியா, சீனா, பனாமா, அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் நேரடி வர்த்தக சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. கொரோனா பரவல் முதல்கட்ட நிலையின்போது கூட அத்தியாவசிய தேவைகள் காரணமாக துறைமுகம் தொடர்ந்து இயங்கும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நேரத்திலும் அத்தியாவசிய சரக்குகள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பணியில் வ.உ.சி.துறைமுகம் செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகக் குறைந்த அளவு சரக்குகள் கையாளப்பட்ட நிலையில் சரக்கு கையாள்வதில் ஏற்பட்ட தேக்கநிலையை 2021-ம் ஆண்டில் மீட்டெடுக்கும் பணியில் வ உ சிதம்பரனார் துறைமுகம் முழுவீச்சில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் துறைமுக நிர்வாக அலுவலகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உடனடியாக துறைமுக நிர்வாக அலுவலகம் மூடப்படுவதாக துறைமுக தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கூறியுள்ளார். மீண்டும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் நிர்வாக அலுவலகம் வரும் 26ஆம் தேதி திறக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
துறைமுக பணியாளர் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து நிர்வாக அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மீண்டும் நிர்வாக அலுவலகம் திறக்கப்படும் வரை துறைமுகம் சம்பந்தமான அலுவல் பணிகளை துறைமுக ஊழியர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.