அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் - கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் கடம்பூர் ராஜு கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கடம்பூர் ராஜூ சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன், விளாத்திகுளம் வேட்பாளர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற வேட்பாளர் மோகன் உள்ளிட்டோருக்கு விமானநிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் கடம்பூர்ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆவார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி ஓரிரு தினங்களில் வேட்பாளரை முதல்வர் அறிவிப்பார். தேர்தல் அறிக்கையில் மக்கள் விரும்புகின்ற அனைத்து திட்டங்களும் இடம் பெறும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அதிமுகவின் வெற்றிக்கு கூடுதலாக பலம் சேர்க்கும் என கடம்பூர்ராஜு தெரிவித்தார்.