திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
HIGHLIGHTS
திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம் வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். மாணவர்கள் தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக வளர்வதற்கும் வழிவகுக்கும். எனவே, திருக்குறள் ஒப்பித்தல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டுவது, மாணவர்களின் நல்வாழ்வுக்குத் துணை நிற்பதாகவும், திருக்குறள் நெறி பரவ வழிவகுப்பதாகவும் அமையும் என்று கருதி, அரசு திருக்குறள் ஒப்புவித்தல் பாராட்டுப் பரிசினை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், 2018-2019, 2020-2021ஆம் ஆண்டுகளில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மஞ்சுஷா என்ற மாணவிக்கும், திருவாரூர், ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் சாருதர்ஷிணி என்ற மாணவிக்கும் இன்று 16.02.2022 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசுத்தொகை தலா ரூ.10,000 மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா உடனிருந்தார்.