திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் காவனூர் ஊராட்சி சூரணூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகனூரான் மகள் தங்கம் (25). பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வம் மகன் லட்சுமி ராஜன். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாமல் நீண்டகாலமாக உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் லெட்சுமி ராஜன் அந்த குழந்தை தன்னுடையது இல்லை என கூறி வந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தையின் தந்தை லெட்சுமிராஜன் என தெரிய வந்த பிறகும் லட்சுமி ராஜன் ஏற்க மறுத்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து லட்சுமி ராஜனுக்கு வேறொரு பெண் பார்க்க உள்ளதை அறிந்த தங்கம் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு லட்சுமிராஜனிடம் முறையிட்டுள்ளார். லெட்சுமி ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாதவன், நாகராஜ், கவிமுரசு ஆகியோர் தங்கம், தங்கத்தின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த தங்கத்தின் பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தங்கம் தனது 3 வயது குழந்தையுடன் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார்.
அருகிலிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி கொரடாச்சேரி காவல் நிலையத்தை அனுப்பி வைத்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.