தஞ்சாவூரில் வெளிமாநில மதுபானம் கடத்திய 3 பேர் கைது, கார் பறிமுதல்
தஞ்சாவூரில் வெளிமாநில மதுபானம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
கொரோனா பரவலால், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருவது போல, அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து, தமிழகத்தில் அதிக விலைக்கு விற்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.
இக்கும்பல் குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்தவகையில், தஞ்சாவூரை சேர்ந்த ஜெயசூர்யா,, கார்த்திக், ராஜா, ஆகிய மூவரும் வந்த காரை, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ.,டேவிட் ஆகியோர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது காரின் பின்புறம் இருந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்த போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மதுப்பாட்டில்கள் இருந்தது.
தொடர்ந்து நடந்த விசாரணையில், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு காய்கறி ஏற்றி வந்த லோடு ஆட்டோவில், மதுபாட்டில்கள் மறைத்து கொண்டு வந்தவர்களிடம் இருந்து, மதுபாட்டில்களை வாங்கி, திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சாவூருக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்த கார், 180 மில்லி அளவிலான 288 மதுப்பாட்டில்கள், 90 மில்லி அளவிலான 166 பாட்டில்கள் என 454 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.