நூல் விலை உயர்வு: கலெக்டரிடம் விசைத்தறி உரிமையாளர் மனு
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியான பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் மாதம் ரூ. 3000 கோடிக்கும், வருடம் ரூ. 44000 கோடிக்கும் உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஜி.எஸ்.டி-க்கு ரூ. 2200 கோடி கிடைக்கிறது. தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளினால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், விசைத்தறி தொழிலில் ஏற்பட்டுள்ள நூல் விலையேற்றத்தால் விசைத்தறி தொழில் முடங்கி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசைத்தறி தொழிலாளர்களும், உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 1455 ரூ என்று இருந்த நூல் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து, தற்போது ரூ.2175 ஆக உள்ளது. அதிகபட்சமாக 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கோரி நாளையில் இருந்து 3 நாட்களுக்கு சங்கரன்கோவிலில் விசைத்தறி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நேற்று விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து, இன்று சங்கரன்கோவில் மாஸ்டர் வீவர்ஸ் விசைத்தறி சங்கத்தினர், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு, நூல் விலையை கட்டுப்படுத்த நூல் உற்பத்தியாளர்கள், நூல் உபயோகிப்பவர் மற்றும் அரசுத் தரப்பு என முத்தரப்பினர் கொண்ட நூல் விலை கட்டுப்பாட்டு குழு அமைத்து, அதன் மூலம் நூல் விலை நிர்ணயத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினர்.