மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி புளியரையில் மழைமானி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான புளியரையில் மழைமானி அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
HIGHLIGHTS
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான புளியரையில் மழைமானி அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நவம்பர் மாதத்திற்கான விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சுந்தர கோபால ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் உரத்தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்தனர். தேவையான அளவு உரம் வந்துள்ளது. மழை காரணமாக அதனை விநியோகிக்க முடியவில்லை. இன்று மாலை அல்லது நாளை மாலைக்குள் அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரம் விற்பனை மையங்களுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் புளியரை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியாகும். இங்கே அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படுகிறது. ஆனால் மழைமானி இல்லை. எனவே அரசு ஆய்வு செய்த பகுதியில் மழைமானி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பயிர் காப்பீடு தொடர்பான விவாதம் ஏற்பட்டது. அதிலுள்ள குறைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அடவிநயினார் அணை பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தும் பிரதான சாலை பொதுப்பணித் துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது அதனை விவசாய பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் நெல்லை, தென்காசி ஒன்றிணைந்த மாவட்டத்தில் 11 நெல் அறுவடை இயந்திரம் உள்ளது. ஆனால் அதுவும் பழுதடைந்து காணப்படுவதால் அதனை சீர் செய்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.