சிவகங்கை ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரத பூஜை
சிவகங்கை அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் சுமங்கலி பூஜை வழிபாடு.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் வரலட்சுமி விரத திருநாளை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை வழிபாடு மிக விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக விநாயகப் பெருமான், முருகப்பெருமான் மற்றும் மூலவர் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்றன.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் தனி சன்னதி அமைந்துள்ள ஸ்ரீ குபேர மகாலட்சுமி தாயாருக்கு சந்தன காப்பு சாற்றி வளையல் கொண்டு சர்வ அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்து பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டன. இதனை அடுத்து கோவில் வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட துர்க்கை அம்மன் சன்னதி முன்பு கோவில் சிவாச்சாரியார் தலைமையில் ஏராளமான பெண்கள் ஒன்றாக அமர்ந்து சுமங்கலி பூஜை செய்து வழிபட்டனர்.
கணபதி பூஜையுடன் துவங்கிய சுமங்கலி பூஜையில் சங்கல்பம் செய்து சிவாச்சாரியார்கள் வரலட்சுமி மந்திரங்கள் ஜபிக்க பெண்கள் மங்கலப் பொருட்களான தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் கொண்டு சுமங்கலி பூஜை செய்து துர்க்கை அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து துர்க்கை அம்மனுக்கு அலங்கார தீபம், நாக தீபம், கும்ப தீபம் மற்றும் பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ மகாலட்சுமி தாயாரையும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மனையும் வழிபட்டனர்.