பூப்பந்து போட்டியில் இளைஞர்களுடன் விளையாடி அசத்திய எம்எல்ஏ
தற்போது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் மதுரா பூப்பந்து கிளப் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி கடந்த 27ம் தேதி துவங்கியது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வந்த மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா இன்று மாலை ஜெஜெ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, ஜெஜெ. கல்லூரியின் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கினர். இதையடுத்து, எம்எல்ஏ முத்துராஜா, பூப்பந்து விளையாடி, மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
விழாவில், எம்எல்ஏ- முத்துராஜா பேசியதாவது , தற்போது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்த அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். படிப்பில் எவ்வளவு தூரம் ஆர்வம் இருக்கிறதோ அதே போல் விளையாட்டிலும் அதே அளவு ஆர்வத்துடன் குழந்தைகளை தயார்படுத்தி வருகின்றனர் . தற்போது உள்ள சூழ்நிலையில், பெண்களுக்கு விளையாட்டு மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. விளையாட்டுகளில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுவதால் உடலும் வலிமை பெறும், தன்னம்பிக்கையும் ஏற்படும். எதையும் சாதிக்கும் திறன் கிடைக்கும். எனவே, படிப்பில் அதிக ஆர்வம் காட்டும் மாணவர்கள் அனைவரும், விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றார் எம்எல்ஏ.