நபார்டு வங்கி அளித்த கடனில் தமிழகஅரசின் நிலுவைத்தொகை ரூ.10 ஆயிரம் கோடி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நபார்டு வங்கி இ -சக்தி திட்டம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது
HIGHLIGHTS
தமிழக அரசு மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நபார்டு வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றார் நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் .
புதுக்கோட்டையில் தனியார் ஹோட்டலில் நபார்டு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவர் வேளாண் உற்பத்தி நிறுவனத்தினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் கலந்து கொண்டு நபார்டு வங்கியின் சார்பில் விவசாயிகளுக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு என்னென்ன கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்து விளக்கிக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் செல்வராஜ் மேலும் கூறியதாவது: நபார்டு வங்கி சார்பில் தமிழக அரசுக்கு அடிப்படைப் பிரச்னைகளை தீர்ப்பதற்காக வருடத்திற்கு 2000 முதல் 3000 கோடி வரை கடனாக தமிழக அரசு பெற்றுள்ளது.
1994ம் ஆண்டு முதல் நபார்டு வங்கியில் இருந்து தமிழக அரசு கடன் வாங்கி கிராமங்கள் தோறும் தார் சாலை அமைப்பது பள்ளிகள் கட்டுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக செலவு செய்கிறது .அது போன்று வாங்கிய கடனில் தமிழக அரசு, நபார்டு வங்கிக்கு 11 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் தொகையில் நிலுவையில் உள்ளது . இதை, தமிழக அரசு நபார்டு வங்கிக்கு முறையாக திருப்பிச் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் 10 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நபார்டு வங்கி இ சக்தி திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக பல்வேறு பயிற்சிகளை நபார்டு வங்கி அளித்து வருகிறது.
தமிழகத்தில் 650 உழவர் வேளாண் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகிறது. 350 உழவர் உற்பத்தி மையங்கள் நபார்டு வங்கியின் உதவியோடு செயல்பட்டு வருகிறது.இவர்களுக்கு நபார்டு வங்கி சார்பில் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் 45 லட்ச ரூபாய் ஒரு உழவர் வேளாண் உற்பத்தி மையத்திற்கு கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாரம்பரிய முறையில் நெல் வகைகள் சிறு தானிய வகைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றார்.