கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!

கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!

கோப்பு கார்ட்டூன் படம் 

தினமும் தன்னை அடித்து உதைத்த கணவனை கொன்று அவரது உடலை எரித்த மனைவி கைதானார்.

அசாமில் ஜோர்ஹத் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரகலாத் சோரன். தேயிலை தோட்ட தொழிலாளி. இந்நிலையில், இவருடைய பாதி எரிந்த நிலையிலான உடல் மரியானி பகுதியில் உள்ள முர்முரியா தேயிலை தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இரவில் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், சோரன் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், சோரனின் மனைவி கணவரின் உடலை தீ வைத்து எரித்த தகவல் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

சோரன் தினமும், குடித்து விட்டு வந்து குடும்பத்தில் சண்டை போட்டுள்ளார். மனைவியை அடித்து, உதைத்து வந்துள்ளார். மகனுக்கும் அடி விழுந்துள்ளது. பெற்றோர் தினமும் சண்டை போட்ட நிலையில், அதனை பார்த்து மகன் அதிர்ச்சி அடைந்து இருக்கிறான்.

இதனால், மகனை பாதுகாக்க கணவரை கொலை செய்வது என்ற முடிவை அவர் எடுத்திருக்கிறார். இந்த வழக்கில், சோரனின் மகனான மைனர் சிறுவனையும் வழக்கில் சேர்த்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த சட்டத்தின் கீழ் சிறுவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு எதிராக தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story