நீட் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 165 பேர் தேர்ச்சி
நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 165 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், நீட் தேர்வில், கடந்த ஆண்டு 51 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு 165 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியா முழுவதும், எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்புக்கான நீட் என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வு தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, கடந்த ஜூலை, 17ம் தேதி, நாடு முழுவதும், நீட் தேர்வு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த தேர்வில், 4,871 தேர்வர்கள் கலந்து கொண்டனர். நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசுப்பள்ளிகள் 88, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஒன்று, பழங்குடியினர் நலத்துறை பள்ளி 5, என மொத்தம் 94 பள்ளிகளை சேர்ந்த 589 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர். அவர்களில், 165 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அதில், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நாகேஷ்வரன் 373 மதிப்பெண், நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சரண் 280. வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சரண் விஷ்வா 260, வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விஜய் 228, திம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அஜித்குமார் 221 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.
மேலும், 300 மதிப்பெண்ணுக்கு மேல் ஒருவர், 200க்கு மேல் 142 பேர் பெற்றுள்ளனர். அவர்களில், அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில், 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு 530 பேர் நீட் தேர்வு எழுதியதில் 51 பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பு ஆண்டு, 165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வுக்காக பயிற்சி அளித்த ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பாராட்டினார்.