நாமக்கல்: விவசாயி கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.
HIGHLIGHTS
விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில், பெண் உட்பட, 6 பேருக்கு, தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, விட்டம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன் (65). அவரது மகன் முருகேசன் (50) என்பவருக்கும், ஏமப்பள்ளியை சேர்ந்த பாப்பு (எ) பெருமாயி (65) என்பவருக்கும், 12 வயது பேரனை வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், 2012ம் ஆண்டு, நவ. 13ம் தேதி, தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த முருகேசன் அவரது தந்தை செங்கோடன் ஆகியோரை, பெருமாயி தன்னுடன் அழைத்துச் சென்ற நபர்களுடன் சேர்ந்து தாக்கினார்.
அதில், படுகாயம் அடைந்த செங்கோடன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 2012 டிசம்பர் 3ம் தேதி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக, மொளசி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, பெருமாயி, பாம்பு முருகேசன் (53), முருகேசன் (48), செல்வராஜ் (47), முத்துசாமி (66), இளங்கோ (48), வெங்கடேஷ் (33) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, நாமக்கல் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி சுந்தரய்யா தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், முத்துசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். மீதம் உள்ள, 6 பேருக்கும், தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.