நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 20,534 மாணவ, மாணவிகள் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 20,534 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 89 அரசு பள்ளிகள், 9 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி 80 தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 202 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் இந்த ஆண்டு 20,534 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 படித்து வந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
எனவே பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த உத்திரவின்படி மதிப்பெண் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் படித்த 20,534 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வருகிற 22ம் தேதி வியாழக்கிழமை முதல் அதற்கான வெப்சைட் முகவரியில், மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை டவுன் லோடு செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு நாமக்கல் மாவட்டத்தில் 545 பேர் ஆன்லைனில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பில் பங்கேற்றனர். சம்மந்தப்பட்ட மாணவர்கள் படித்த பள்ளியிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் வரை அரசுப் பள்ளியில் புதிதாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.