லாரி உரிமையாளர்கள் கோரிக்கைகள்: முதல்வரை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை - எம்எல்ஏ ஈஸ்வரன் தகவல்
லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
HIGHLIGHTS
நாமக்கல்:
லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் வாங்கிலி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செங்கோடு எம்எல்ஏவும், கொமதேக பொதுச்செயலாளருமான ஈஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் லாரித்தொழிலில் மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் லாரிப் போக்குவரத்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும். ஆன்லைன்மூலம் அபரதாம் விதிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சில பிரச்சினைகள் குறித்து போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்வு காணப்படும். பயோ டீசல் முறையாக விற்பனை செய்ய அனுமதி பெற முயற்சி எடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக முதல்வரை, லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை எம்எல்ஏ ஈஸ்வரனிடம் அளித்தனர்.
சங்க துணைத்தலைவர்கள் சுப்புரத்தினம், பாலச்சந்திரன், பொறுப்பு செயலாளர் மயில் ஆனந்த்,ஆட்டோ நகர் சங்கத்தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார், பேட்டரி, ஆட்டோ எலக்ட்ரிக்கல் உரிமையாளர் சங்கத்தலைவர் மணி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.