கரும்பில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வேளாண்துறை வழிகாட்டு முறைகள்

பைல் படம்
கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த, கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகளை வேளாண்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்தில், வட்டூர், 48.கைலாசம்பாளையம், கொல்லப்பட்டி, ஏ.இறையமங்கலம், பிருதி, சிக்கிநாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களிலும், பள்ளிபாளையம் வட்டாரத்தில், சமயங்கிலி அக்ரஹாரம், சீராம்பாளையம், குமாரபாளையம் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களிலும், கரும்பு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இதையொட்டி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ரவி, வேளாண் துணை இயக்குனர் கவிதா தலைமையில் வேளாண் துறையினர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் வட்டாரங்களில் வயல் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரும்பில் மாவுப்பூச்சியின் தாக்குதல் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அதிக வெப்பத்தைத் தொடர்ந்து மழை பெய்துள்ளதால், சீதோஷ்ண நிலை மாவுப்பூச்சியின் பெருக்கத்திற்கு சாதகமாக உள்ளது. மாவுப்பூச்சி தாக்கப்பட்ட வயல்களில் பயிரின் வளர்ச்சி குறைந்துள்ளது. மேலும், நுண்சத்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
அதனால், கரும்பில் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, விவசாயிகள் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பூச்சி நோய் தாக்குதல் இல்லாத வயல்களில் விதைக்கரணை தேர்வு செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 20 கிலோ நுண்ணூட்டச்சத்து, 2 தவணைகளில் இட வேண்டும். தோகை உரித்து வயல்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். அதிக நீர் பாய்ச்சுவதையும், அதிக உரம் இடுவதையும் தவிர்க்க வேண்டும். மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, மீன் அமிலம் தெளித்தல் அல்லது தையோமெத்தாக்சிம், 10 லிட்டர் தண்ணீருக்கு, 6 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu