கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்திய அமைச்சர் முருகன் தகவல்
கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்து வருவதாக மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
HIGHLIGHTS
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், புதிதாக அமைய உள்ள பால் குளிரூட்டும் மையம் மற்றும் ஆவின் பால் பண்ணை குறித்து, தேசிய பால்வள வாரிய மண்டல அலுவலர்கள், நாமக்கல் ஆவின் அலுவலர்களுடன், மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் முருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2018 முதல், சேலத்தில் இருந்து புதிதாக நாமக்கல் பால் கூட்டுறவு ஒன்றியம் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் 1.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லுக்கு என பிரத்தியேகமாக தேசிய பால்வள வாரியம் வழங்கும் கடன் உதவியுடன் ரூ.89 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ. 64 கோடி தேசிய பால்வள வாரியம் வழங்கி உள்ளது. மீதமுள்ள தொகை மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், பால் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் ரூ. 18 பங்களிப்பு தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது. புதிய ஆவின் பால் பண்ணை அமைப்பதற்கான நிலம் கிடைத்தவுடன், 18 மாதத்தில் ஆவின் பால் பண்ணை அமைக்கப்படும். இதன்மூலம், பால் சுத்திகரிப்பு, பால் உப பொருட்கள் தயாரிப்பு மேம்படும். மாவட்டத்தில் வேலை வாய்ப்பு ,பொருளாதாரம் உயரும்.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தில், பண்ணையாளர்கள், தனிநபர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஒவ்வொருவரும் 200 நாட்டு பசு மாடுகள் வளர்க்க மத்திய அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. கடனு உதவியும் வழங்கப்படுகிறது.
அதன் மூலம், ஒவ்வொரு அமைப்பினரும்,ரூ.4 கோடி மதிப்பில் நாட்டு பசு அபிவிருத்தி செய்ய அவற்றை வளர்க்கலாம். இதற்காக மத்திய அரசு ரூ. 53 ஆயிரம் கோடிநிதி ஒதுக்கீடு செய்துள்ள.
மீன்வளத்தை பொருத்தவரை 2014ம் ஆண்டுக்கு முன், ரூ. 3,000 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின், அத்துறையை மேம்படுத்திட நீலப் புரட்சி திட்டத்தை அறிவித்து ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தேசிய மீன்வளவாரியத்திற்கு, ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்துக்கு மட்டும், ரூ. 1,800 கோடி வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு, திருவள்ளூர், திருவொற்றியூர், நாகை, விழுப்புரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில், மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல், மீன் சந்தைகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பி.எம்.எம்.எஸ்.ஒய். திட்டத்தில் இரண்டாம் ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். இத்திட்டத்தில் முதலில் ரூ. 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டு, கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ. 32 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் இந்தியா உலகிலேயே முதல் நாடாக திகழ்கிறது. கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்திலும், இப்பொருட்களை ஏற்றுமதி 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல், கொச்சின், சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப், மேற்குவங்கம் ஆகிய, 5 மீன்பிடி துறைமுகங்கள், தலா ரூ. 100 கோடி மதிப்பில், நவீனப்படுத்தப்பட உள்ளன. கடல்பாசி தொழில் மேம்படுத்த ரூ. 120 கோடி மதிப்பில், ராமேஸ்வரத்தில், திட்டத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கடலோர மீன்வளம் மட்டும் அல்லாமல், பிரான் ஏற்றுமதி, உள்நாட்டு மீன் இனங்கள், மீன் வளர்ப்பு நிலையங்கள், தீவன ஆலைகள் மானியம் வழங்குதல் உள்ளிட்டவை, பிஎம்எம்எஸ்ஒய் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, திருச்சி, கொடைக்கானல் ஆகிய ஆல் இந்தியா ரேடியோ எப்.எம். நிகழ்ச்சிகளை நேயர்கள் அதிக அளவில் கேட்டு வருகின்றனர். நாமக்கல்லுக்கு என, தனியாக வானொலி நிலையம் தேவை ஏற்பட்டால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.