பணத்துக்காக விவசாயி அடித்து கொலை: மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை
பணத்துக்காக விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில், மனைவி மற்றும் மகனுக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
பணத்துக்காக விவசாயியை அடித்து கொலை செய்த வழக்கில், மனைவி மற்றும் மகனுக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்துள்ள என்.புதுப்பட்டி மேலத்தோட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (53). விவசாயி. அவர், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மனைவி பாப்பாத்தி (51), மகன் ராஜ்குமார் ( 32) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். அம்மா, மகன் இருவரும், தொகுப்பு வீடு கட்டி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், தொகுப்பு வீடு கட்டிதற்கு அரசு நிதி உதவி ரூ. 1.50 லட்சம் செல்வராஜ் பெயருக்கு வந்துள்ளது. அந்த பணத்தை கேட்டு, மனைவி பாப்பாத்தி, மகன் ராஜ்குமார் இருவரும், அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு டிச. 4ம் தேதி, மாலை 3 மணிக்கு, செல்வராஜ் வீட்டுக்கு சென்ற பாப்பாத்தி, ராஜ்குமார் இருவரும், அவரை அங்கிருந்த பந்தலில் கையை பின்பக்கமாக கட்டி வைத்து, மண் வெட்டியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, அங்கு சென்ற செல்வராஜின் தம்பி கருப்பையா மகன் மோகன்குமார், அவரது தங்கை சசிகலா ஆகியோர் தடுத்தனர். அவர்களையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். உயிருக்கு போராடிய செல்வராஜை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை சம்மபவம் தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாப்பாத்தி அவரது மகன் ராஜ்குமார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி நந்தினி தீர்ப்பாளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட தாய் பாப்பாத்தி, மகன் ராஜ்குமார் ஆகியோருக்கு, ஆயுள் தண்டனையும், தலா ரூ. 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து, அவர்கள், கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.