சம்பள நிலுவையை உடனடியாக வழங்க கொரோனா சிறப்பு நர்சுகள் கோரிக்கை
சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி, கொரோனா சிறப்பு நர்சுகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
HIGHLIGHTS
சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி, கொரோனா சிறப்பு நர்சுகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட கொரோனா சிறப்பு பணி நர்சுகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்பில், கொரோனா சிகிச்சை பணிக்காக கடந்த மே மாதம் 50 நர்சுகள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தற்போது 42 நர்சுகள், பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு, ஜூன் மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது. பின்னர், கடந்த ஜூலை முதல் 5 மாதங்களாக யாருக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் நர்சுகளும், அவர்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இம்மாத இறுதியுடன் தற்காலிக நர்சுகள் அனைவரையும் வேலை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சம்பள நிலுவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.