நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தி ரூ.8 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
தீபாவளிக்கு, இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை ஆபீசில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.8 லட்சம் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகை நேரத்தில், அரசுத்துறை அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர்கள் மூலம் பயன்பெறுபவர்கள், அனைத்து அலுவகங்களிலும் இனாம் வாங்குவது வழக்கம். ஒவ்வொரு அலுவலகத்திலும் லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெறும். குறிப்பாக, பதிவுத்துறை அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் போன்ற அலுவலகங்களில், அதிக அளவில் பணம் புழக்கம் காணப்படும்.
நாடு முழுவதும், வரும் 24ம் தேதி, தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வழக்கம் போல், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்களது அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர்.
முதல் கட்டமாக, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில், இன்று மாலை, 6 மணிக்கு, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த கணக்கில் வராத, ரூ. 8 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளிக்கு, இன்னும், 10 நாட்கள் உள்ள நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம், நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் என்ற வாசகங்கள் இடம் பெற்ற நோட்டீசுகள் ஒட்டப்பட்டு இருக்கும். ஆனால் லஞ்சம் என்பது ஒரு பொது வியாதியாக மாறி வருகிறது. அதுவும் தீபாவளி நேரத்தில் சொல்லவே வேண்டாம். சாதாரண கடைநிலை ஊழியர் முதல் உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் வரை அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் தீபாவளி இனாம் என்ற பெயரில் லஞ்ச பணத்தை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் தீபாவளி பண்டினை முடியும் வரை அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படும் நிலை உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.