சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
நாகையில் சுனாமி வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம், பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் நாகையில் உள்ள நல்லியான்தோட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி பகுதியைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் முகாம் பின்புறமுள்ள சூர்யா நகரில் சுனாமி தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்நிலையில் 13 ஆண்டுகளாக குடியிருக்கும் சுனாமி வீடுகளுக்கு இதுவரை அரசு பட்டா வழங்கவில்லை. மேலும் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுவதால், அங்கு அவர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பழுதடைந்த வீடுகளை புனரமைப்பு செய்து குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சூர்யாநகர் பகுதி மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். சுனாமியில் கணவனை இழந்து கூலி வேலை செய்யும் விதவை பெண்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உடனடியாக அரசு பட்டா வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அப்பகுதிவாசிகள், தங்களது பெயரில் பட்டா இல்லாத காரணத்தால், அந்தவீடுகளை சீரமைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களின் குடியிருப்புகளை புனரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.