மாங்காயில் புதிய வகை புழுக்கள் விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காயில் புதிய வகை புழுக்கள் உருவாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம் மாங்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக உள்ளது. இந்நிலையில் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள தட்டக்கல், ஜெகதேவி, ஆனந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள மாங்காயில் ஆந்திராவை சேர்ந்த புதிய வகை புழுக்கள் தோன்றியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே இந்த புதிய வகை புழுக்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் உருவாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், இது குறித்து தோட்டக்கலைத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெங்களூர் தேசிய வேளாண் பூச்சியியல் மூலாதார ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானி மோகன், கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன், கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணி, துணை இயக்குனர் ராம்பிரசாத் ஆகியோர் காவேரிப்பட்டணத்தை அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தில் புழு பாதித்த மாங்காய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குனர் உமாராணி நிருபர்களிடம் கூறியதாவது: காவேரிப்பட்டணம் பகுதியில் 428 ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள மா வயல்களில் ஒரு புதிய வகைப் புழுக்கள் உருவாகி உள்ளது. தொடர்ந்து விவசாயிகள் மருந்து தெளித்து வருவதால் இவை உருவாகி இருக்கலாம். இதற்கு முதல் உதவியாக இரண்டு மருந்துகளை வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர். அதில், புளுபெண்டமைடு ஒரு லிட்டருக்கு 5 மி.லி., வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் இரண்டு முறை தெளிக்க வேண்டும். அல்லது டெல்டாமெத்ரின் ஒரு லிட்டருக்கு பு மி.லி., கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை வீதம் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இவற்றை தெளிப்பதன் மூலம் இந்த புழுக்கள் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியல் துறை உதவி பேராசிரியர் கோவிந்தன் கூறுகையில், இந்த புழுக்கள் புதிய வகையாக உள்ளதால், பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார்.