7 பேர் கட்சி நீக்கத்திற்கு கட்சிக்கட்டுப்பாடு தான் காரணம்: முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் 7 பேர் கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு கட்சிக்கட்டுப்பாடு என முன்னாள் அமைச்சர் நழுவினார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரமன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைத்தனர்.
இதனை கண்டித்து நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன், கவுன்சிலர்கள் ரேவதி, பூங்கொடி, நந்தினிதேவி, கட்சி உறுப்பினர்களாக உள்ள இவர்களின் கணவர்கள் திருமூர்த்தி, வெங்கிடு(எ)வெங்கடேசன், ராஜகணேஷ் ஆகிய 7 பேரையும் அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்தனர்.
இது குறித்து குமாரபாளையம் வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 7 பேர் நீக்கப்பட்டது கட்சி கட்டுப்பாடு சம்பந்தப்பட்டது. இதில் பதில் சொல்ல ஏதுமில்லை என தெரிவித்தார்.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் ஓட்டல் வைத்து தொழில் செய்து வருபவர் இளங்கோ. இவரது மகன் சூர்யா உக்ரைன் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். தற்போது போர் நடந்து வரும் வேளையில் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி அவரது வீட்டிற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் அவர் நேற்றுமுன்தினம் மாணவர் ஊர் திரும்பினார்.
இந்த மாணவரை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறி, வாழ்த்து தெரிவித்தார். இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவர் புஷ்பா, ஊராட்சி அ.தி.மு.க. செயலர் குமரேசன், நிர்வாகிகள் செல்வம், செல்லமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.