ஸ்ரீபெரும்புதூரில் பூட்டை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூரில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
HIGHLIGHTS
மாதத்திற்கு ஒரு கொள்ளை சம்பவம் என மூன்று மாதங்களாக ஸ்ரீபெரும்புதூரில் நடந்துள்ள தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சுமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பல நூறு தொழிற்சாலைகள் உருவாகி அதில் தமிழக முழுவதிலும் இருந்த தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதி சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். பலர் சொந்தமாகவே இடங்களை வாங்கி வீடுகளை கட்டி உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விமலா நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கணேஷ் (வயது45.) இவருக்கு பார்வதி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணேஷ் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள தன்னுடைய மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.இரவு வீடு திரும்ப முடியாத நிலையில் அங்கேயே தங்கியுள்ளார்.இந்நிலையில் அருகில் உள்ள வீட்டில் குடியிருப்பவர் நாகராஜின் மனைவி ஊருக்கு சென்றுள்ளதால் நாகராஜ் தனியே வீட்டில் இருந்துள்ளார் . காலையில் எழுந்து கதவை திறக்கும் பொழுது வெளியே யாரோ கதவை தாழிட்டு சென்றுள்ளது தெரியவந்தது.
இதனால் நாகராஜ் தனது மனைவிக்கு போன் செய்து யாரோ வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு சென்று விட்டனர். ஆகவே அருகில் உள்ளவர்களுக்கு போன் செய்து திறக்க சொல் என கூறியுள்ளார்.உடனே மேல் வீட்டில் இருப்பவர் கதவை திறந்து உள்ளார். வீட்டுக்கு வெளியே வந்து பைக் உள்ளதா என்று நாகராஜ் பார்த்துள்ளார். பைக் இருந்துள்ளது.
சரி பக்கத்து வீட்டை பார்க்கலாம் என்று நாகராஜ் தன் அருகில் உள்ள கணேஷ் வீட்டை பார்த்த பொழுது கதவு திறந்து கிடந்திருக்கிறது. மிக அருகில் சென்று பார்த்த பொழுது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே அதிர்ந்து போன நாகராஜ் கணேசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த கணேஷ் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 சவரன் தங்க நகை 1.5 கிலோ வெள்ளி கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
கொள்ளை சம்பவம் குறிப்பு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் வீராசாமி பிள்ளை தெருவில் 35 சவரன் நகை கொள்ளையும் , அதேபோல் செப்டம்பர் மாதம் ஆயக்குளத்தூரில் 35 சவரன் நகையும் கொள்ளை போன சூழலில், தற்போது 17 பவுன் நகை கொள்ள போய் உள்ளது ஆகவே தொடர் திருட்டால் ஸ்ரீபெரும்புதூர் மக்கள் பீதியில் உள்ளனர் . மேலும் இதுவரை எந்த கொள்ளையர்களையும் கைது செய்ய முடியாமல் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் திணறி வருகின்றனர்.