காஞ்சிபுரத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு, சிசிடிவி காட்சிகள் உதவுமா ?
காஞ்சிபுரம் நகரில் பட்டப்பகலில் செயின் பறிப்பு முயற்சி மற்றும் வாகன திருட்டு, வீட்டு பூட்டை உடைத்து திருட்டு என குற்றங்கள் தொடர்வதால் காவல்துறை குற்றவாளியை பிடிக்க சிசிடிவி உதவியை நாடி உள்ளனர்.
HIGHLIGHTS
கொரோனாவால் கடந்த ஒரு மாதமாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பரவலை கட்டுப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாகவே காஞ்சிபுரம் நகரில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தாலுகா காவல் நிலைய எல்லையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, வாகன திருட்டு எனத் தொடர்கிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 5ஆம் தேதி பட்டப்பகலில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் செயின் பறிப்பு முயற்சி செய்த போது பெண் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர்கள் தப்பி சென்றனர்.
அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் பின்புறம் உள்ள வீட்டில் இன்று அதிகாலை ரூபாய் 1.75 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை இரு வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சர்வோதய நகரில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் தங்க நகை, விலை உயர்ந்த பட்டு புடவைகள் , வெள்ளி பொருட்கள் என திருட்டு நடைபெற்றது.
பெரியார் நகர் பகுதியிலும் இதே போல் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை தேடி சென்றது என நாள்தோறும் குற்றங்கள் அதிகரித்து காஞ்சிபுரம் திகழ்கிறது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் காவலர்களை தீவிரம் காட்டி வரும் வேளையில் அவர்களை ஏமாற்றி கொள்ளை சம்பவங்களை லாவகமாக அரங்கேற்றி வரும் திருடர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.