காஞ்சியில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சி டிக்கெட் என கட்டண கொள்ளை
நாளை வெளியாகும் விஜய் திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4மணி திரையிடவுள்ளதை காண ஒரு டிக்கெட் ரூ1600 என விற்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழ் திரையுலகில் நாளை இளைய தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. தமிழகம் வெளியாக உள்ள இத்திரைப்படத்தினை காண பல்வேறு திரையரங்குகளில் நேரடியாகவும் வலைதளங்கள் மூலமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் ரசிகர் மன்றங்கள் மூலம் காலை 4 மணிக்கு சிறப்புக் காட்சி காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்படுகிறது. இதற்கான பார்வை கட்டணம் ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 1,600 என ரசிகர் மன்றங்களால் விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் இருந்து பொதுமக்களால் வாழ்வாதாரத்தை மீட்க இயலாத நிலையிலும், தற்போதைய விலைவாசி உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இவ்விலையை பொருட்படுத்தாது டிக்கெட் வாங்கித்தர பெற்றோர்களை வற்புறுத்துகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் ஓருவர் கூறுகையில், நாள்தோறும் காலை10 முதல் இரவு 11 மணி வரை கடுமையாக உழைத்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்ப செலவுகளும் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் சமாளிக்கிறோம். கடும் சிக்கலில் உள்ள இந்த நிலையில் இதுபோன்ற திரைப்படங்களை கண்டிப்பாக முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என எங்கள் குழந்தைகள் கடந்த 2 நாட்களாக கடும் நெருக்கடி தந்தனர்.
இந்நிலையில் இதற்கான டிக்கெட்டை பெற முயன்ற போது கடும் விலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அடுத்த காட்சிக்கான ரூ300 ரூபாய் கிடைப்பதாக கூறியும் முதல் காட்சியைப் பார்க்கணும் என அடம் பிடிப்பதால், குழந்தைகளை விருப்பத்திற்காக 4 டிக்கெட்டுகளை ரூபாய் 6400 பணம் கொடுத்து வாங்கிய பின்புதான் தங்கள் குழந்தை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் இது போன்று கட்டண கொள்ளை அடிப்பது எந்த விதத்தில் நியாயம்?. இது அந்த நடிகருக்கு தெரியாமலா இருக்கும்? அதுவும் கொடுத்த டிக்கெட்டில் எவ்வளவு கட்டணம் என்றும் குரிப்ப்பிடப்படவில்லை. சினிமாவில் மட்டுமே வசனங்களால் பேசுவது இயல்பு வாழ்க்கையில் தடுக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
ரசிகர் மன்றத்தினர் அதிக விலைக்கு விற்கும் டிக்கெட் பணம் யாருக்கு போய் சேருகிறது? அந்த பணம் எதற்கு பயன்படுகிறது? என தெரியாத நிலையில், இதில் யாரை நாம் குற்றம் சொல்வது?
கேட்டவுடன் வாங்கித்தரும் பெற்றோர்களையா? குடும்ப சூழல் தெரியாத ரசிகர்களையா? அல்லது இது போன்று நடப்பதை கண்டும் காணாது இருக்கும் நிர்வாகத்தையா?
பீஸ்ட் என்றால் தமிழில் விலங்கு என அர்த்தம். இது போன்று கட்டணக் கொள்ளையை மேற்கொள்பவர்களையும், அதனை ஆதரிப்பவர்களையும், கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் என்னெவென்று சொல்ல?