எம்ஜிஆர் செய்த உதவிகள்.. திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்..
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தனக்கு செய்த உதவிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலையில், மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியதாவது:
எனக்கு கிடைத்த வாய்ப்புகள் வேறு யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி தேர்தலை சந்திக்கும்போது அனைவரும் சென்று நிலையில், நான் திமுகவின் கொள்கை பிடிப்பும் கருணாநிதியின் செயல் திறனும் கண்டு திமுகவிலேயே தொடர்ந்தேன்.
நாவலர் போன்றவர்களுக்கு எம்ஜிஆரை தெரியும் என்பதை தவிர வேறு ஒன்றும் அறியாதவர்கள். ஆனால், நான் எம்ஜிஆரின் மடியில் தவழ்ந்தவன். நான் நன்றியோடு கூறுகிறேன் எனக்கு ஏழு ஆண்டுகள் என் கல்வி செலவை முழுவதும் ஏற்றவர் எம்ஜிஆர்.
எனது திருமணம் காட்பாடியில் நடந்த போது விமானத்தை தவற விட்டு தனி விமானம் மூலம் எனது திருமணத்திற்கு வந்து எனக்கு பணம் மற்றும் நகை பரிசளித்து சென்றவர் எம்ஜிஆர். மேலும், என்னை அவர் வழக்கறிஞராக பார்க்க ஆசைப்பட்டதும் உண்டு.
அவ்வளவு நெருக்கம் எனக்கும் எம்ஜிஆர் இருக்கும் இருந்த நிலையில், ஒரு சமயம் சட்டப்பேரவை தலைவர் அறையில் இருந்து என்னை தனியாக அழைத்து சென்று நான் சொன்னால் நீ செய்வாயா எனக் கேட்டார். அதற்கு நிச்சயமாக செய்வேன் என்ற நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் இருக்கைக்கு அருகில் போய் அமரு உனக்கு தேவையான அமைச்சர் பதவி தருகிறேன் என கூறினார்.
அப்போது, அது மட்டும் என்னால் இயலாது எனக் கூறி நன்றி என்று பார்த்தால் அது உங்களுக்கு எனவும், கட்சி என்று பார்த்தால் திமுக எனவும் நான் கூறியதை கண்டு வியப்புற்று சட்டப் பேரவையில் ஒரு முறை எனது தம்பி துரைமுருகன் கொள்கையில் உறுதியானவன் என தெரிவித்து வாழ்த்து தெரிவித்தவர் எம்ஜிஆர்.
மேலும், தற்போது உள்ள நிலைமையில் தொண்டர்களின் மனம் வேதனை அடையாத வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். காலம் விரைவில் வந்தால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். திமுகவின் கொள்கை பிடிப்பு கொண்ட தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் எதுவும் அசைக்கவும் முடியாது என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
கூட்டத்தில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.