வாலாஜாபேட்டையில் 16.8 அடி உயர கல் கருடன் சிலைக்கு பொதுமக்கள் வழிபாடு
ஸ்ரீதன்வந்தரி ஆரோக்கிய பீடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட 16.8 அடி உயர கல் கருடன் சிலைக்கு வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களால் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் உள்ள சிற்பக்கூடத்தில் லோகநாதன் ஸ்தபதியால் 16.8 அடி உயரமும்,8 அடி அகலமும் உடைய விஸ்வரூப அஷ்டபுஜ நாக கருடன் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இச்சிலை ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்காக மகாபலிபுரத்திலிருந்து டிராக்டரில் திருக்கழுக்குன்றம்,நெம்மேலி, செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக கல்கருடன் சிலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் புதன்கிழமை மாலையில் தன்வந்தரி ஆரோக்கிய பீடத்துக்கு சென்று சேருகிறது.
இந்நிலையில் வரும் வழியில் வாலாஜாபாத் பேருந்து நிலையம், முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் உற்சாக வரவேற்பும், சிறப்பு வழிபாடும் செய்தனர்.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில், திருக்கழுக்குன்றம் பைரவர் உபாசகர் அன்புச்செழியன் சுவாமிகள், தொழிலதிபர்கள் வேலாயுதம், பாண்டியன், எஸ்.எம்.சில்க்ஸ் மனோகர் ஆகியோர் உட்பட பக்தர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
இது குறித்து தன்வந்தரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் முரளீதர சுவாமிகள் கூறுகையில், பட்சிராஜாவாக இருப்பவர் கருடன், மகாபலிபுரத்தில் செய்யப்பட்ட இந்த கல்கருடன் சிலையானது 16.8 அடி உயரமும், 8 அடி அகலமும் உடையது.8 தலைகள் உடைய நாகத்தோடு கூடிய ஒரே கல்லால் இச்சிலை மகாபலிபுரத்தில் லோகநாதன் ஸ்தபதியால் செய்யப்பட்டு இன்று தன்வந்தரி ஆரோக்கிய பீடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் உற்சாக வரவேற்பும்,சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகின்றனர். இவரை வணங்கினால் சர்ப்பதோஷங்கள்,திருமணம் மற்றும் புத்திரத்தடை, விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள்,வாகன விபத்துகள்,தோல் வியாதிகள் போன்றவை அகலும்.மனக்குழப்பம் நீங்கி தைரியம் பிறக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.